Tamilnadu

மாணவர்களுக்கு வழங்கும் மிதிவண்டிகள் தரமானவையே... தவறாக பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் !

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிதிவண்டிகள் தரமில்லாததாக இருப்பதாகவும், இதனால் மாணவர்கள் அந்த மிதிவண்டிகளை விற்பனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு வெளியான செய்திகள் தவறானது என்று தற்போது தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் குறித்து வெளிவந்த உண்மைக்குப் புறம்பான பத்திரிகைசெய்திக்கான அரசின் மறுப்பறிக்கை வருமாறு :-

தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதி வண்டிகள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும்பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆண்டுதோறும் தோராயமாக 5 இலட்சம் மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றது.

இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படுகின்றன. மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகின்றது. மிதிவண்டிகளை கிண்டியில் உள்ள CTAL(Chemical Testing Analytical Lab) நிறுவனத்தில் முழுமையாக Destructive Test செய்யப்பட்டு தர அறிக்கை (Quality Test Report) பெறப்படுகிறது. அதன் பின்னரே நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதி வண்டிகள் Specificationபடி தரமாக உள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது. இச்செய்தி குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அவ்வறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், நல்ல நிலையில் அதனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனவும் மிதிவண்டிகளை தனியார்களுக்கு விற்பனை செய்ததாக மாணவர்களால் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடை ஆய்வு செய்யப்பட்டதில், அங்கிருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பழுதுநீக்கம் செய்யப்பட்டவுடன் மாணவர்கள் பெற்றுச் செல்வர் என்றும், அவை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டவைஅல்ல என்று தெரியவருவதா கவும் குறிப்பிட்டுள்ளார். இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள்வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் பல்கலைக்கழக மாண்புக்கும், மரபுக்கும் எதிரானது - காங்கிரஸ் கண்டனம் !