Tamilnadu

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பொது அட்டவணை அறிமுகம்! : உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 பல்கலைக் கழகங்களில் கீழ் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு, பட்டம் வழங்கப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு பல்கலைக் கழகமும் ஓரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை தொடங்கி, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால் ஒரு பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் வேறு பல்கலைக் கழகத்தில் சேர்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் வகுப்புகளை தொடங்கி, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், கல்லூரிக்கல்வி இயக்குநர் கார்மேகம் அவர்கள், அழகப்பா, பெரியார், பாரதியார், மதுரை காமராஜர், பாரதிதாசன், மனோன்மனீயம் சுந்தரானார், அண்ணாமலை, திருவள்ளுவர், அன்னை தெரசா ஆகிய பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள், வேலை நாட்கள் ஆகியவற்றை ஒரே சீராக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் புதிய வரைவு கால அட்டவணையை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024-25ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்கும் எனவும், வரும் ஆண்டுகளில் 1,3,5 ஆகிய பருவத்திற்கான தேர்வுகள் அக்டோபர் 31ம் தேதி அன்று தொடங்கி நவம்பர் 25ம் தேதி அல்லது அதற்கு முன்பே நிறைவடையும் எனவும், தேர்வு முடிவுகள் டிசம்பர் 16 அல்லது அதற்கு முன்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,4,6 ஆகிய பருவத்திற்கான தேர்வுகள் ஏப்ரல் 15 தொடங்கி, மே 10ஆம் தேதி முடிவடையும் என்றும், மே 31ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி... மீண்டும் பூதாகரமான ஓம் பிர்லாவின் மகள் தேர்ச்சி விவகாரம் !