Tamilnadu

6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி! : 'நான் முதல்வன்' திட்டத்தின் அடுத்த முன்னெடுப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் வழி, பல்வேறு மாணவர்கள், பல்வேறு உயர்பொறுப்புகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.

இது குறித்து, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, “கடந்த 3 மூன்று ஆண்டுகளில், நான் முதல்வன் திட்டம் மூலமாக, 3.06 இலட்சம் இளைஞர்களுக்கும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2.02 இலட்சம் இளைஞர்களுக்கும், தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் என மொத்தம் 5.08 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் அடுத்தகட்ட முன்னெடுப்பாக, 6 மாத இலவச உண்டு, உறைவிட பயிற்சி திட்டமும் அறிமுகமாக உள்ளது.

அதனடிப்படையில், சென்னை மண்டல மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே போட்டி தேர்வுக்காக 300 பேருக்கும், மதுரை மற்றும் கோவை மையத்தில் வங்கிப் பணி போட்டித் தேர்வுக்காக, தலா 350 பேருக்கும் உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அதற்கான, டெண்டரில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 3 மணிக்குள் https://tntenders.gov.in/nicgep/app இந்த இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், 2024 - 2025 ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.

இதனால், சரியான பயிற்சி நிறுவனம் மூலம், மேலும் பல மாணவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தங்களது குறிக்கோள்களை அடைய இயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “எமெர்ஜென்சி காலத்தில் எங்களுக்கு மோடி, நட்டா எல்லாம் யார் என்றே தெரியாது” - லாலு பிரசாத் யாதவ் பளீச் !