Tamilnadu

“வீழ்த்த முடியாத திராவிட மாடல் - இதுதான் ’Dravidian Algorithm’”: பேரவையில் அமைச்சர் உதயநிதி அனல் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர்கள் துறைவாரியாக உறுப்பினர்களின் கேள்வி பதில்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும் மானியக் கோரிக்கைகளையும் துறைவாரியாக அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம் துறை & வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன் துறைக்கான மானியக் கோரிக்கையை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

புகழ்பெற்ற Sapiens: A Brief History of Humankind என்ற நூலை எழுதிய வரலாற்று ஆய்வாளர் யுவால் நோவா ஹரி அவர் உரை ஒன்றில் எப்படி கம்ப்யூட்டருக்கு அல்காரிதம் உள்ளதோ அதேபோல உயிரினங்களுக்கும் அல்காரிதம் உண்டு என்று சொன்னார்.

எப்படி ஒவ்வொரு உயிரினத்தக்களும் அல்காரிதம் இருக்கிறதோ அதேபோல ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு ஆல்காரிதம் உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிடியன் மாடல் என்று சொல்கிறோமோ அதேபோல திராவிடியன் ஆல்காரிதம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த திராவிடியன் அல்காரிதம் தமிழகத்தில் ஏதோ ஒரே நாளில் உருவானது அல்ல. அதற்கு தேவையான அனைத்து தகவல்களையும், அனுபவங்களையும் நீதி கட்சி காலத்தில் இருந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கொடுக்கப்பட்டது.

தந்தை பெரியார் பகுத்தறிவு கொள்கையை பிரச்சாரம் செய்ததற்காக அடித்துக்கொள்ளப்பட்ட உடையார் பாளையம் வேலாயுதம் தொடங்கி, நீட் தேர்வினால் கொல்லப்பட்ட அரியலூர் அனிதா வரையிலான உயிரிழப்புகளையும் கண்டது தான் இந்த திரவியம் அல்காரிதம்.

நீட் தேர்வு நல்லதா கெட்டதா என்பதை ஒட்டுமொத்த நாடு புரிந்து கொள்வதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தி திணிப்பை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை மற்ற மாநிலங்கள் புரிந்து கொள்வதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் புரிந்து கொண்டார்கள்.

மற்ற மாநிலங்கள் சிந்திப்பதற்கு முன்பே கலைஞரால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார்.

இப்படி ஒட்டுமொத்த மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய சமூக நலத்திட்டங்கள் பலவற்றை தமிழகத்தில் என்றைக்கோ நடைமுறைப்படுத்தி விட்டது.

இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணா, முத்தமிழர் கலைஞர் ஒவ்வொரு காலத்திலும் மெருகேற்றப்பட்ட இந்த திரவிடியன் ஆல்காரிதம் தான்.

இன்றைக்கும் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் தமிழ்நாடு மதவாத பக்கம், சாதிவாதம் பார்க்காமல் இருப்பதற்கு இந்த திராவிடியன் ஆல்காரிதம் தான்.

தமிழ்நாடு அரசை எப்படி திராவிட மாடல் வழி நடத்துகிறதோ அதேபோல தமிழ்நாட்டு மக்களையும் இந்த திராவிட ஆல்காரிதம் நடத்துகிறது.

சூட்சுமங்கள் அறிந்த தலைவராக இருப்பதால் தான் நம்முடைய தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் அவர் தலைமையில் நடக்கும் திராவிட மடல் ஆட்சி தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார். அதற்கு என்னாலும் நாம் துணை நிற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் மாபெரும் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !