Tamilnadu

ரூ.1 லட்சம் கோடி கடன் உதவி : 43 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பெரியகருப்பன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இன்று கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

1.தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக, கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.1 இலட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.

2.தானியங்களை பாதுகாப்பாக சேமிக்கவும், நல்ல விலை பெறுவதற்கு ஏதுவாகவும், கூட்டுறவு அமைப்புகள் மூலம் தானிய சேமிப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

3.கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் “பணியாளர் நாள்“ நிகழ்வு நடத்தப்படும்.

4.உணவுப் பொருட்களின் தரத்தை பாதுகாக்க ஏதுவாக TANFED நிறுவனத்தின் குளிர்பதன கிடங்குகள் நவீனமயமாக்கப்படும்.

5.கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு அவர்களின் பணித்திறனை மேம்படுத்திட அவர்களின் பணிசார்ந்த புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

6.விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் பெருநகரங்களில் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படுவதுடன் இதற்கென முக்கிய மாவட்டங்களை இணைத்து காய்கனி வழித்தடங்கள் உருவாக்கப்படும்.

7.அனைத்து கூட்டுறவு விற்பனைச் சங்கங்களும் வேளாண் விளைபொருள் பதனிடும் சங்கங்களாக மேம்படுத்தப்படும்.

8.பெருகிவரும் நுகர்வு கலாச்சார தேவைக்கேற்ப கூட்டுறவு சிறப்பங்காடிகள் நவீனப்படுத்தப்படும்.

9.நுகர்வோர் நலன் கருதி கூட்டுறவுச் சங்கங்களில் மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை விரிவுபடுத்தப்படும்.

10.பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு நுகர்பொருட்களை விநியோகம் செய்வதற்கு புவியிடங்காட்டியுடன் (GPS) கூடிய இ-வழித்தடம் (e-Way) ஏற்படுத்தப்படும்.

11.தமிழ்நாட்டில் கூட்டுறவு தொடர்பான பணிகளை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கூட்டுறவு கருத்தரங்கம் (National Co-operative Conference) நடத்தப்படும்.

12.அனைத்து கூட்டுறவு அலுவலகங்கள் மற்றும் சங்கங்களின் பணிகள் கணினிமயமாக்கப்படும்.

13.கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மூலம் இணையவழி (Online) கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

14.கூட்டுறவுச் சங்க சேவைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளவும், அலுவலர்கள் களப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக புதிய “கூட்டுறவு செயலி” (Cooperative App) உருவாக்கப்படும்.

15.ஏற்காட்டில் கூட்டுறவு மலையக வள மையம் (Cooperative Hill Area Resource Centre) அமைக்கப்படும்.

16.மலையகக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் (LAMPS) சில்லறை விற்பனை நிலையங்கள் (LAMPSCO) அமைக்கப்படும்.

17.தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் மற்றும் பெருநகரங்களிலும் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும்.

18.தமிழ்நாட்டில் அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் விதமாக கூட்டுறவு மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பு உருவாக்கப்படும்.

19.அனைத்து கூட்டுறவுச் சங்க / வங்கிப் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் “விற்பனை / செயல்திறன் ஊக்குவிப்பு திட்டம்” அறிமுகப்படுத்தப்படும்.

20.கூட்டுறவு அமைப்புகளின் வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக “கூட்டுறவு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” (Cooperative Infrastructure Development Scheme) செயல்படுத்தப்படும்.

21.கூட்டுறவு அமைப்புகளில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த ஏதுவாக “கூட்டுறவு தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம்” (Cooperative Technology Development Scheme) செயல்படுத்தப்படும்.

22.கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகளில் புதிய முயற்சிகளை செயல்படுத்திட ஏதுவாக “கூட்டுறவில் புதிய முயற்சிகள் திட்டம்” (Cooperative Innovation Scheme) செயல்படுத்தப்படும்.

23.நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு புத்துயிரூட்ட “கூட்டுறவு இணைப்புச் சங்க ஆதரவுத் திட்டம்” (Member Support Programme) செயல்படுத்தப்படும்.

24.நவீன கூட்டுறவு தொழில்நுட்பங்களை இளைஞர்களிடையே கொண்டு செல்ல ஏதுவாக சென்னையில் “கூட்டுறவு தொழில்நுட்ப மையம்” உருவாக்கப்படும்.

25.மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும்.

26.கூட்டுறவுகள் மூலம் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை சேவைகள் வழங்கப்படும்.

27.கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்படும்.

28.உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும்.

29.கூட்டுறவு வங்கிகள் மூலம் மின்னணு வங்கியியல் கூடங்கள் (Banking Kiosk) அமைக்கப்படும் .

30.மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பருப்பு மற்றும் சிறுதானியங்கள் பதனிடும் அலகுகள் அமைக்கப்படும்.

31.பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் சேவை விரிவுபடுத்தப்படும்.

32.கூட்டுறவு பதனிடும் சங்கங்களில் பெறப்படும் உப பொருட்களை பயன்படுத்தி கால்நடை மற்றும் கோழி தீவன உற்பத்தி அலகுகள் அமைக்கப்படும் .

33.நலிவடைந்துள்ள உப்பு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள் புத்துயிரூட்டப்படும்.

34.காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் “காஞ்சி கூட்டுறவு வளாகம்” கட்டப்படும்.

35.வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யவும் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

36.மாநில அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவுச் சங்கம், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

37.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் வாரிசுகளில் அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

38.தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் இராமநாதபுரத்தில் வேளாண் இடுபொருட்கள் சேமிக்க 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு கட்டப்படும்.

39.வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகள் நவீனமயமாக்கப்படும்.

40.விவசாய பெருமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் மற்றும் நவீனமயமாக்கல் பணி மேற்கொள்ளப்படும்.

41.பொது விநியோகத் திட்ட நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குதவற்காக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் பொலிவூட்டப்படும் .

42.கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கவும் விசாரணையை கண்காணிக்கவும் “இ-தீர்வு” திட்டம் தொடங்கப்படும்.

43.அனைவருக்குமான கூட்டுறவு என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவுச் சங்கங்களின் அனைத்து சேவைகளும் ஒருங்கே கிடைக்க கூட்டுறவுச் சங்கங்களின் 100 கிளைகள் தொடங்கப்படும்.

Also Read: ”22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் விளையாட்டரங்கம்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!