Tamilnadu

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு கட்டணமின்றி பயணம்! : அமைச்சர் கா. இராமச்சந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், நேற்றைய நாள் (26.06.24), அமைச்சர் கா. இராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை, மானியக் கோரிக்கை வழி வெளியிட்டார்.

அவ்வறிவிப்புகள் பின்வருமாறு,

1. ரூ. 8.10 கோடி மதிப்பீட்டில் வழிபாட்டு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள்!

அரியலூர், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், ரூ. 8.10 கோடி மதிப்பீட்டில் வழிபாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

2. ரூ. 10.20 கோடி மதிப்பீட்டில் அருவிகளில் சுற்றுலா மேம்பாடு!

திருச்சி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைந்துள்ள அருவிகள் மற்றும் அணையில், ரூ. 10.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படும்.

3. ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி பணிகள்!

தமிழ்நாட்டில் தென் கடலோர பகுதிகளில், ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

4. ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில் ஏரிப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்!

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரு ஏரிகளில் படகு குழாம் அமைத்தல், நவீன வசதிகள் ஆகியவை ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில், செய்து தரப்படும்.

5. ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கிராமிய சுற்றுலா மேம்பாடு!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூரின் வால்பாறை Hornbill பகுதிகளில் காட்சிமுனை அமைப்பு, கிராமியச் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. ரூ. 2 கோடி மதிப்பீட்டில் "சுற்றுலாப் பெருந்திட்டம்!”

உட்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா சேவைகளின் தர மேம்பாட்டின் மூலம் பிரபலப்படுத்த, ரூ. 2 கோடி மதிப்பீட்டில் "சுற்றுலாப் பெருந்திட்டம்” தொடங்கப்படும்.

7. ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு!

மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் சுற்றுலாவை (Medical and Wellness Tourism) மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூரில், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும்.

8. ரூ.1 கோடி மதிப்பீட்டில் நீர் சாகசச் சுற்றுலா விளையாட்டுகள் ஊக்குவிப்பு!

பாய் படகு (Sailing), அலைச்சறுக்கு (Surfing), படகோட்டுதல் (Rowing), குறும்படகு (Kayaking) மற்றும் இதர நீர் சாகச விளையாட்டுகள், ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஊக்குவிக்கப்படும்.

9. கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு கட்டணமின்றி பயணம்!

அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி செல்ல அனுமதி. 60 வயது நிறைவடைந்திருப்பின், அவருடன் உதவியாளர் ஒருவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

10. ரூ. 1.50 கோடி செலவில் புதிய காட்சிக் கூடங்கள்!

நாகப்பட்டின அரசு அருங்காட்சியகத்தில், நவீன தொழில் நுட்பத்துடனும், காட்சியமைப்புடனும் கூடிய புதிய காட்சிக் கூடங்கள் அமைத்து, ரூ. 1.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

Also Read: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் மாபெரும் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !