Tamilnadu

2500 சிறுபான்மையின மகளிருக்கு தையல் இயந்திரங்கள் : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், நேற்றைய நாள் (25.06.24), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்துப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மானியக் கோரிக்கை வெளியீடு!

1. ரூ.1.60 கோடியில் 2500 சிறுபான்மையின மகளிருக்கு தையல் இயந்திரங்கள்!

தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தேவையான பயிற்சி அளித்து, மின்மோட்டாருடன் கூடிய ஒரு தையம் இயந்திரம், ரூ. 6,400 மதிப்பில், 2,500 மகளிருக்கு வழங்கப்படும்.

2. பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்!

கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத்தொகை ரூ. 1000 இலிருந்து ரூ. 1200ஆகவும், இயற்கை மரண உதவித்தொகை, ரூ. 20,000 இலிருந்து ரூ. 30,000ஆகவும், விபத்து மரண உதவித்தொகை ரூ. 1 இலட்சத்திலிருந்து ரூ. 1.25 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.

3. ரூ.3.96 கோடியில் மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டடம்!

ரூ.3.96 கோடியில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

4. ரூ.56 இலட்சத்தில் கல்லூரி மாணவர் விடுதி!

ரூ.56 இலட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறுபான்மையினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி புதிதாக துவங்கப்படும்.

5. ரூ.5 கோடியில் 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள்!

ரூ.5 கோடியில் மக்கள் அதிகம் வரும் தொன்மையான, தமிழ்நாட்டின் 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

6. மாநிலம் முழுவதும் நில அளவை செய்யப்படும்!

ரூ.1 கோடியில் மாநிலம் முழுவதுமுள்ள வக்ஃப் வாரிய நிலங்கள் நவீன நில அளவை கருவிகள் மூலம் நில அளவை செய்யப்படும். 30 உரிமம் பெற்ற அளவர்களை நியமனம் செய்து GDPS Rover கருவிகள் மூலம் நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

7. ஹஜ் புனித பயணிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்!

முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் புனித பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

8. நாட்டின் முக்கிய நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

தமிழ்நாடு கைவினைப் பொருட்களை நாடெங்கெலும் பிரபலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு கைவினைஞர்களின் தயாரிப்புகளை, பொருட்கண்காட்சி வழியாக, நாட்டின் முக்கிய நகரங்களில் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.

Also Read: ரூ. 10.59 கோடியில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைப்பு! : அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் அறிவிப்பு!