Tamilnadu

அர்ச்சர்களுக்கு மாத உதவித்தொகை : அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.ரூ.177.10 கோடியில் 6 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.

2.1000 திருக்கோயில்களின் அர்ச்சர்களுக்கும் மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்கப்படும்.

3.ரூ.85 கோடி அரசு நிதியில் ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 திருக்கோயில்களின் வைப்புத்தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

4.திருக்கோயில்களில் புதியதாக தொடங்கப்பட உள்ள 100 புத்தக விற்பனை நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தொகுப்பூதிய பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

5.ரூ.1.58 கோடியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம். இந்த ஆண்டு 1000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

6.ரூ.1.05 கோடி அரசு நிதியில் 420 மூத்த குடிமக்கள் இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

7.ரூ.11.50 கோடியில் நான்கு திருக்கோயில்களில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யப்படும்.

8.பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

9.ரூ.3.75 கோடியில் வள்ளலார் அவதரித்த இல்லம் மறுசீரமைப்பு செய்யப்படும்.

10.300 அரிய ஆன்மிகப் புத்தகங்கள் பதிப்பகப்பிரிவின் மூலம் மறுமதிப்பு செய்து வெளியிடப்படும்.

11.ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் தலா 1000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்து செல்லப்படுவர்.

12.ரூ.9 கோடியில் இரண்டு திருக்கோயில்களில் புதிய தங்கத்தேர்கள் செய்யப்படும்.

13.சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகரில் ரூ.50 கோடியில் 115 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும்.

14.பழனி, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு இவ்வாண்டு முதல் மதிய உணவும் வழங்கப்படும்.

15.நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

Also Read: 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!