Tamilnadu

சாதிவாரியான கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்? : பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கோ.க. மணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நம்முடைய உறுப்பினர் கோ.க. மணி அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி, அதற்கு நம்முடைய அமைச்சர் பெருமக்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு கோ.க. மணி அவர்கள் ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!