Tamilnadu

கள்ளக்குறிச்சி விவகாரம் : மெத்தனால் கடத்துவதற்கு உதவிய மேலும் இரண்டு பேர் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விஷ சாராயம் தயாரிக்க மெத்தனால் வினியோகம் செய்த மாதேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அடுத்த வட பெரும் பக்கத்தில் உள்ள அவரது குடோனில் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான மெத்தனால் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் மாதேசுக்கு மெத்தனால் கடத்தி செல்வதற்கு உதவியாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சக்திவேல் என்பவருக்கு பண்ருட்டியில் பேக்கரி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. பேக்கரிக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்லும்பொழுது மெத்தனாலையும் கடத்திச் சென்று சாராயம் தயாரிக்க கூடிய நபர்களுக்கு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சக்திவேலுக்கு உதவியாக கண்ணனும் செயல்பட்டுவதாகவும் இதன் காரணமாக இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் அளிக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் மேலும் சிலரை கைது செய்ய உள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மே.வங்கத்தில் பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்: தூக்கி வீசப்பட்ட பெட்டிகள் -விபத்து நடந்தது எப்படி?