Tamilnadu

1.30 கோடி செலவில் பெட்ரோல் பங்க் அமைக்கப்படும் : அமைச்சர் முத்துசாமி அறிவிப்பின் முக்கிய விவரங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது.

பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அது பின்வருமாறு :

  • திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.1.30 கோடி செலவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) அமைக்கப்படும்.

  • ரூ.57.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் 10 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் அமைக்கப்படும்.

  • ரூ. 70.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்படும்.

தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அது பின்வருமாறு :

  • ரூ.20 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள் மின்-வழி கற்றல் மற்றும் பகிர்ந்த பணியிட (Co-Working Space) மையங்களாக மேம்படுத்தப்படும்.

  • சென்னைப் பெருநகர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் (சென்னை அங்காடி) அமைக்கப்படும்.

  • சென்னைப் பெருநகர் பகுதியில், வெள்ள நிகழ்வுகளின் போது அவசரகால நடவடிக்கையை மேம்படுத்துவதற்கும், வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கும் வெள்ளக் கட்டுப்பாடு வரைபடம் (Flood Control Map) தயாரிக்கப்படும்.

  • ரூ.10 கோடி மதிப்பீட்டில் மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை 'மெரினா பாரம்பரிய வழித்தடம்' (Marina Heritage Corridor) மேம்படுத்தப்படும்.

  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.

  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.

  • 5000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்படும்.

Also Read: முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம் : மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கையில் 13 அறிவிப்புகள்!