Tamilnadu

கள்ளக்குறிச்சி விவகாரம் : மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை அதிரடியாக கைது செய்த CBCID போலீஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன்

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் ரசாயனம் கலந்த சாராயம் விற்ற வழக்கில் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய மூன்று பேர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மெத்தனால் சாராயத்தை விற்ற தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் சின்னத்துரையை போலிசார் நேற்று அதிரடியாக கைது செய்த நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜோசப் ராஜா என்பவர் அவருக்கு மெத்தனாலை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில், மேலும் பலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சட்டப்பேரவையில் விதிகளை மீறி கடும் அமளி : வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் - சபாநாயகர் விளக்கம்!