Tamilnadu

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பழனிசாமி : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ” சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்தான். இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். CBCID விசாரணை அறிக்கை கிடைத்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி சொல்வது போல், மருந்துதட்டுப்பாடு இல்லை. உயிர் காக்கும் அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. ஒரு நோயாளிக்கு இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் நியமித்து, பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே பழனிசாமி இந்த குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: கள்ளக்குறிச்சி சம்பவம் : விசாரணை ஆணையம் அமைப்பு - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் !