Tamilnadu

இதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலம் : IIM ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் தமிழ்நாட்டில் கடந்த 5 மாதத்தில் ரூ.7 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கிடைத்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகள், நகரமயமாதல் மற்றும் சமூக வளர்ச்சி குறியீடு ஆகியவற்றில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது இந்திய மேலாண்மை கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைகள், நகரமயமாதல் மற்றும் சமூக வளர்ச்சி குறித்து, ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மை கழகத்தின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இந்தியாவில் உள்ள மற்ற சில மாநிலங்களோடு ஒப்பிடும்போது பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் வழங்கும் மாநிலங்களில், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொருத்தவரையில் மகாராஷ்டிராவில் 28 ஆயிரம் தொழிற்சாலைகளும், குஜராத்தில் 22 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி குறியீடு மற்ற மாநிலங்களை விட 10 விழுக்காடு கூடுதலாக இருப்பதும் இந்திய மேலாண்மை கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Also Read: அனைத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!