Tamilnadu

'நான் முதல்வன்' திட்டம் : இங்கிலாந்தில் பயிற்சி... முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற 25 மாணவர்கள் !

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது, தமிழ்நாட்டின் மாணவ - மாணவியரின் தனித்திறனை கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்காக 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இரண்டு ஆண்டுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய S.C.O.U.T (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1267 மாணவ மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களிலிருந்து 100 மாணாக்கர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் முதலில் 24 மணி நேர ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் ஜூன் 9 முதல் 16 வரை இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய முன்னணி துறைகளில் ஒரு வார காலம் நேரடி பயிற்சி பெற்று இன்று தமிழ்நாடு திரும்பினார்.

இத்திட்டம் தமிழ்நாட்டை சேர்ந்த திறமையான கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அனுபவம் மற்றும் மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பாக அமைந்தது, மேலும் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் பயிற்சி முதலிய செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் UK வும், இணைந்து ஏற்றுக்கொண்டுள்ளது.

S.C.O.U.T பயிற்சி பெற்று தமிழ்நாடு திரும்பிய இந்த 25 மாணவர்களும் இன்று சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று, அவருடன் இத்திட்டம் குறித்து கலந்துரையாடினர்.

அதற்கு முன்பாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த மாணவ மாணவியர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களில், 20 மாணவர்கள் அரசு கல்லூரியிலும், 5 தனியார் கல்லூரியில் பயின்றவர்கள், 11 ஆண்கள், 14 பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று உள்ளனர். இதில் சுஜாதா குப்புசாமி மற்றும் கிருத்திகா துளசிமணி ஆகிய 2 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

Also Read: சபாநாயகர் தேர்தல்: தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால் இந்தியா கூட்டணி ஆதரவு- சிவசேனா (உத்தவ்) அறிவிப்பு!