Tamilnadu

பா.ஜ.க தலைவர்கள் மீது மட்டும் UAPA சட்டம் மௌனம் காப்பது ஏன்? : அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!

எழுத்தாளர் அருந்ததி ராய் 2010ம் ஆண்டு Azadi The Only Way என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இவர் காஷ்மீர் இந்தியாவிலேயே இல்லை என பிரிவினை வாதத்தைப் பேசியதாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். இந்த உத்தரவிற்கு தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், ”சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி 2010-ல் காஷ்மீரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய Arundhati Roy அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பின் Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டெல்லி ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருக்கிறது. ஒருவேளை இது பாஜக அவருக்கு பதவி வழங்கியதற்கு காட்டும் கைமாறா என்பது தெரியவில்லை! அருந்ததி ராய் அவர்களின் பேச்சு இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 ஆகியவற்றிற்கு முரணாக உள்ளதெனில், அதே வகை குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்?

1. மோடி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இசுலாமியர்களை 'ஊடுருவல்காரர்கள்' என்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்றும் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தி மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் நச்சுமிகுந்த கருத்துக்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

2. “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாட்டு மக்களை திருடர்களைப் போல சித்தரித்து காயப்படுத்தினார் பிரதமர் மோடி.

3. தமிழ்நாட்டு மக்களின் உணவு கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஒடிசா பாஜக வீடியோ வெளியிட்டது. இது போன்ற நிகழ்வுகளில் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 153A, 153B & 505 கோமாவிற்கு சென்றது ஏன்?

ஜனநாயகத்திற்கு எதிரான UAPA சட்டம் இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்று. இச்சட்டத்தின் கீழ் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மட்டும் 4871 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்கு உள்ளது. குறிப்பாக Manan Dar என்னும் புகைப்பட நிருபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர் சித்திக் கப்பான் 2020 முதல் 2023 வரை சிறையில் இருந்தார்.

இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர். எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: எழுத்தாளர் அருந்ததி ராய் மீது UAPA வழக்கு? : எழுத்தாளர்கள் குரல்களை ஒடுக்கும் பா.ஜ.க!