Tamilnadu

இரவோடிரவாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருட்டு : பாஜக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரவில் வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்ற பாஜக மாவட்ட மீனவரணி நிர்வாகி கைது. உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியை சேர்ந்தவர் 37-வயதான குமார். கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி சுனிதா சுய உதவி குழு மூலமாக வங்கி கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இரவு நேரத்தில் குமார் ஆட்டோவை தனது வீட்டின் முன் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி அன்று விடிந்த பின் பார்த்த போது அதனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளி உருட்டி திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அடுத்தடுத்த விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றது குறும்பனை பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட மீனவரணி நிர்வாகி டிக்சன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து டிக்சனை கைது செய்த குளச்சல் போலீசார், அவரிடமிருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். குளச்சல் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆட்டோ உரிமையாளர் குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா பெண் ஒருவரிடம் கடனாக பெற்ற 10-ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காததால், அதை ஈடுகட்ட பெண்ணுக்கு ஆதரவாக டிக்சன் ஆட்டோவை அதிகாலை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குளச்சல் போலீசார் டிக்சனை திருட்டு வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Also Read: மாயையில் சிக்கிய பா.ஜ.க. தொண்டர்கள் : மோடியை கடுமையாக விமர்சித்த RSS - முரசொலி தலையங்கம் !