Tamilnadu

குவைத் தீ விபத்து... அதிகரிக்கும் தமிழர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை - துரித நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு !

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று காலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தமிழர்கள், கேரளாவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தீ விபத்தில் அவர்கள் அனைவரும் சிக்கி தவித்தனர்.

தொடர்ந்து தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவிய நிலையில், அதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றபோது அதில் சிலர் தீயில் கருகி பலியானர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 53 பேரில் 40 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 24 பேரில் 19 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 4 பேர் தமிழர்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 7 தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த தீ விபத்து செய்து நாட்டையே உலுக்கிய நிலையில், குவைத்தில் மருத்துவ உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க முதலமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். அதோடு +91 1800 309 3793, +91 80 6900 9900, +91 80 6900 9901 என்று உதவி எண்களும் அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கவும் அங்கு இருந்த உடலை தமிழகம் கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும், அங்கு இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரபூர்வமான அடையாளம் காட்டப்பட்ட பிறகு இறந்தவர்கள் குடும்பத்திற்கு உதவிகள் செய்ய உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Also Read: குவைத் தீ விபத்து : தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல் - அமைச்சர் செஞ்சி மஸ்தாஸ் !