Tamilnadu

விதி மீறலில் ஈடுபடும் அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற பேருந்துகள் : போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை !

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) வழங்கப்படுகிறது...

குறிப்பாக சுற்றுலா பயணிகளை யாத்திரை, திருமணம் சுற்றுலா இடங்களை பார்வையிடல் போன்ற காரணங்களுக்காக இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக (AITP) அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறு வகையில் செயல்படுகின்றன என்று போக்குவரத்து துறைக்கு தகவல் கிடைத்துள்ளது...

ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் படி சுற்றுலா பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் பல இடங்களில் பயணிகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்பட்டுள்ளது...

மேலும் பயணிகளுக்கு எஸ் எம் எஸ், இ டிக்கெட் மற்றும் ரெட்பஸ், அபீபஸ் போன்ற பல்வேறு பஸ் டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்களை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக கட்டணத்தை வசூலித்து உள்ளனர்.ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் விதிகளுக்கு எதிராக சுற்றுலா திட்டம் ஒப்பந்தத்தின்படியும் பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமல் இயக்கி ஒப்பந்தத்தின்படி அவர்களின் திட்டமிட்ட பாதை மற்றும் தேதியை பின்பற்றாமல் இருந்துள்ளனர். அதோடு அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு நிபந்தனைகளை மீறி மாநில அரசுக்கு கணிசமான வரிவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்திய பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம் வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....

மேலும் மோட்டார் வாகனத்துறை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் சிறப்பு சோதனை இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் காவல் சோதனை சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணத்திட்ட விவரங்கள் மற்றும் சுற்றுலா முடிவுறும் போது வெளியேறும் வழி ஆகிய விபரங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்...

அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு வாகனங்களின் இயக்கத்தினை நெறிப்படுத்தும் நோக்கில் 13.06.2024 முதல் இந்த நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து அறிவுறுத்தியுள்ளது.அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு சுற்றுலா வாகனங்கள் யாராவது இந்த நிபந்தனைகளை மீறினால் சட்ட விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: நீட் முறைகேடு : "முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்ற செயல்தான் இது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !