Tamilnadu

2 சிறுவர்கள் கார் ஓட்ட பழகியபோது விபரீதம் : அப்பளம் போல் நொறுங்கிய கார்!

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுதர்சன் (14). அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் லோகேஷ் (17).

இந்நிலையில் நேற்று இரவு சிறுவர்கள் இருவரும் கார் ஓட்டி பழகுவதற்காக வீட்டில் நின்று இருந்த மாருதி ஆம்னி காரை எடுத்து சென்றுள்ளனர். சிறுவர்கள் உடன் பெரியவர்கள் யாரும் செல்லவில்லை.

இதையடுத்து காரை சுதர்சன் ஓட்டிச் சென்றுள்ளார். கார் பரமத்தி - கபிலர்மலை நெடுச்சாலையில் சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மீது மோதியது. நேருக்கு நேராக கார் மோதியதில் சிறுவர்கள் ஓட்டிவந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இது பற்றிதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சிறுவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டி பழகியபோது ஏற்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”தமிழ்நாட்டிற்கு மீண்டும் துரோகம் செய்த ஒன்றிய அரசு” : தயாநிதி மாறன் MP கண்டனம்!