Tamilnadu

மதுரை எய்ம்ஸ் - ”ஒன்றிய அரசின் நிதியிலேயே கட்ட வேண்டும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் நில ஒப்படைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை இன்னும் முறையாக தொடங்கவில்லை. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசின் நிதியில் கட்டியது போலவே, தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசின் நிதியிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "2500 கிராம சுகாதார செவிலியர்கள் நியமன பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பா.ஜ.க அரசிடம் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் 6 மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கும் ஏராளமான மருத்துவ மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசிடம் இதே கோரிக்கை வலியுறுத்தப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜெயிகா நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்று கட்டுவதாக கூறினார்கள். இன்னமும் அந்த பணிகள் முறையாக தொடங்கவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் நில ஒப்படைப்பு, சுற்று சூழல் அனுமதி வழங்கிய பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை முறையாக தொடங்கவில்லை.

எனவே புதிய அரசு ஜெயிகா நிறுவனத்திடம் இருந்து நிதியை பெறுவதை நிறுத்திவிட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒன்றிய அரசின் செலவிலேயே கட்டி முடிக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் 10க்கும் மேற்பட்ட முறை நீட் விலக்கு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப நீட் தேர்வினை நடத்த புதிய அரசு அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்குப்பதிவு? - முழு விவரம் இங்கே!