Tamilnadu

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் CBCID முன் நேரில் ஆஜர்!

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வந்த நிலையில் தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் சிக்கினார். பாஜகவை சேர்ந்த சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கேசவ விநாயகத்திற்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பினர்.

எனவே சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது இந்த வழக்கை சட்டவிரோத வழக்கு என்று வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது தேர்தல் சமயத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கை சட்டவிரோத வழக்கு என எப்படி கூறமுடியும்? என்று கேசவ விநாயக தரப்புக்கு கேள்வியெழுப்பியதோடு போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் அவரது வழக்கறிஞரும், பாஜக வேட்பாளருமான பால் கனகராஜும் வந்துள்ளார். தொடர்ந்து தற்போது கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Also Read: ”பா.ஜ.க.வின் பிளவுவாதத்திற்கு எதிரான மக்களின் தீர்ப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேட்டி!