Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி : 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு !

வீடு இல்லாத ஏழை மக்கள் வீடு கட்டிக் கொள்ளும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து வருகின்றன. இதில்,62 சதவிகித நிதியுதவியை மாநில அரசும், 38 சதவிகித நிதியை ஒன்றிய அரசும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்தில் மெகா மோசடிகள் அரங்கேற்றப்பட்டன. பல்வேறு முறைகேடுகள் செய்து, தகுதியில்லாத பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது இதன்மூலம் அம்பலமானது. வீடு கட்டாதவர்களுக்கு நிதியுதவி, வீடுகள் உள்ளவர்களுக்கு நிதியுதவி, பணிகள் முடிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்திற்கும் நிதி வழங்காமல், அரைகுறையாக அரங்கேற்றி அரசு பணத்தை கொள்ளையடித்துள்ளனர் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

கட்டப்பட்டு முழுமை பெறாத வீடுகளின் பயனாளிகளுக்கு நிதியுதவி என எப்படியெல்லாம் முறைகேடுகளை அரங்கேற்ற முடியுமோ, அப்படியெல்லாம் எந்த வித சான்றுகளையும் ஆய்வு செய்யாமல், கட்டட பணிகளை நேரில் பார்வையிடாமல் லஞ்சம் பெற்றுகொண்டு இத்தகைய முறைகேடுகளில் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த மெகா மோசடி தொடர்பாக ஏற்கனவே,நாகப்பட்டினம், திருவள்ளூர்உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச்சூழலில் தற்போது, இத்துறைகளில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவர்களுக்கு சம்மன் அனுப்பிநேரில் வரவழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் முறைகேடு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Also Read: "பா.ஜ.க.வுக்கு பாதகமான சூழல்கள் இருக்கிறது" - பிரபல முதலீட்டாளர் ருச்சிர் சர்மா கருத்து !