Tamilnadu

காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்... நம்பவைத்து ஏமாற்றிய இளம்பெண் கைது!

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபரான ஜாவித் சைபுதின்( வயது 32) என்பவருக்கு சமூக வலைதளம் மூலம் சோனியா என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்த இருவரும் பேசிவந்த நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிந்து கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி அந்த பெண் சைபுதினை தொடர்பு கொண்டு தான் வீட்டில் மது விருந்து வைத்திருப்பதாகவும், நீங்கள் என்னுடைய முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனை நம்பிய சைபுதினும் பட்டினப்பாக்கத்தில் அந்த பெண் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் கூறிய முகவரி அங்கு இல்லாததால் அந்த பெண்ணுக்கு அவர் மீண்டும் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்தை கூறியுள்ளார்.

அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் திடிரென ஜாவித் சைபுதினை மிரட்டி வேறொரு காரில் ஏற்றி தெரியாத ஒரு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை கொன்றுவிடுவதாக அந்த கும்பல் மிரட்டி 50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பின்னர் சைபுதின் தனது நண்பர் தன்வீர் என்பவர் மூலம் அந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னரே அந்த கும்பல் சைபுதீனை விடுவித்துள்ளது. தொடர்ந்து சைபுதீன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் படி போலீசார், சைபுதினின் போனில் பேசிய பெண்ணே இந்த கடத்தல் சம்பவத்துக்கு காரணம் என கருதி அவரின் மொபைல் போன் எண்ணை வைத்து அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 'கலைஞரின் கனவு இல்லம்' : 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !