Tamilnadu

E-Mail-ல் வந்த மிரட்டல் - பரபரப்பான சென்னை விமான நிலையம்!

சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்திற்கு இ - மெயில் மூலம் வெடிக்கு மிரட்டல் வந்துள்ளது. அதில், ”சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் குறித்து ஆய்வு செய்த போது, இது போலியான மிரட்டல் என்று தெரிந்தது. ஆனாலும் இது குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. அதோடு விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் உடைமைகள், விமான நிலையத்தின் கார் பார்க்கிங், எரிபொருள் நிரப்பும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலியான இரண்டு இ-மெயில் ஐடிகள் உருவாக்கி அதன் மூலம் இந்த மிரட்டல் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த மிரட்டல் தகவல்களில், போதை கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சில வாசகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.