Tamilnadu

பூத்துக்குலுங்கும் பூக்கள்: குவிந்த சுற்றுலா பயணிகள் - 2.3 லட்சம் பேர் பார்வையிட்ட ஊட்டி மலர் கண்காட்சி!

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த மே 10ம் தேதி 126 வது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கி, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (26.05.24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற இம்மலர் கண்காட்சியை, நேற்று (25.05.24) மாலை வரை 2 லட்சத்தி 27 ஆயிரத்து 28 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்து மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில்,

இறுதி நாள் ஞாயிறு விடுமுறை நாளாக இருப்பதால், காலை முதல் ஏராளமான சுற்றுலா பணிகள் பூங்காவிற்கு வருகை புரிந்து வருகின்றனர்.

மலர் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல லட்சம் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

அதேப்போல் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுமார் ஒரு லட்சம் ரோஜா, சாமந்தி மற்றும் கார்னேஷன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்ட Disney world மற்றும் அதன் கதாபாத்திரங்கள் போன்ற மலர் வடிவம்,

80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பாரம்பரிய யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் வடிவம், காளான், தேனி உட்பட பல வகையான மலர் அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

கடந்த 20ம் தேதி அன்றே, பரிசளிப்பு விழாவுடன் மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக மேலும் 6 நாட்களுக்கு மலர்கண்காட்சியின் நீட்டிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து,

பூங்கா நிர்வாகம் மலர் அலங்காரங்களில் சேதம் அடைந்த மலர்களை மாற்றி அமைத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொடர்ந்து அலங்காரங்கள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”ஜெய்... ஜெய்... ஜூம்லானந்தா” : பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சிலந்தி!