Tamilnadu

”தமிழர்கள் மீது அபாண்டமாக பழிபோடும் பிரதமர் மோடி” : முத்தரசன் ஆவேசம்!

10 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாததால் பிரதமர் மோடி தேவையில்லாமல் பிதற்றி வருகிறார் என சி.பி.ஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன், ”இந்த மக்களவை தேர்தல் நாட்டிற்கு முகவும் முக்கியமானது. அரசியலமைப்பு சட்டத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து வந்துள்ளது. இதை காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது.

இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. தற்போது இந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாததால் பிரதமர் மோடி தேவையில்லாமல் பிதற்றி வருகிறார்.

அதனால்தான், தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்தபோது திருவள்ளுவரை எனக்கு பிடிக்கும் என்கிறார். தமிழை, தமிழர்களை பிடிக்கும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த உடன், வட மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் மோடி தமிழர்களை திருடர்கள் என்று கூறுகிறார். தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

மேலும் வட மாநிலம், தென் மாநிலம் என்று பிரிவினை வாதம் பேசுகிறார். எதுவும் பயன் கொடுக்காததால் தற்போது தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார். பிரதமர் மோடி என்ன நாடகம் போட்டாலும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போகிறது.”என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஒரு தெய்வப்பிறவிக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டா?” : மோடியை கிண்டல் செய்த சசி தரூர்!