Tamilnadu

பனியன் நிறுவனத்தில் தையல் இயந்திரங்களை திருடிய பாஜக நிர்வாகி... அதிரடியாக கைது செய்த போலீஸ்!

நாடு முழுவதும் பாஜகவினர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு குற்றவாளிகளும் தங்களை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பாஜகவில் இணைந்து தஞ்சமடைகின்றனர்.

அந்த வகையில் தற்போது திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பூட்டை உடைத்து தையல் இயந்திரங்களை திருடி விற்ற வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (35 ). இவர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பாஜக ஐடி விங்க் நிர்வாகி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பனியன் கம்பெனி வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக பனியன் கம்பெனிக்கு ஆர்டர் இல்லாததால் கம்பெனியை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் ஒரு மாத வாடகையை சுந்தரமூர்த்தி முருகேசனுக்கு கொடுக்காமல் இருந்துள்ளார். முருகேசன் வாடகை பணம் கேட்டபோது, தனது நிலைமையை அவரிடம் எடுத்துக்கூறியுள்ளார். எனினும் தனது பணம் வர வேண்டும் என்று பிடிவாதமாக பாஜக நிர்வாகி கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுந்தரமூர்த்திக்கு தெரியாமல், அவரது கம்பெனியின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை எடுத்து விற்பனை செய்துள்ளார். இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட சுந்தரமூர்த்தி வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி முருகேசனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவினர் கொலை மிரட்டல் பெண்கள் மீது வன்முறை அடிதடி போன்ற சட்டவிரோத செயல்களை தொடர்ந்து, தற்போது திருட்டு தொழிலையும் திருப்பூரில் அரங்கேற்றி உள்ளனர்.