Tamilnadu

பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்!

பள்ளி மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு முடிவுக்கு பின், கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்கள், பள்ளிகளுக்கு திரும்பும் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வி துறை நடவடிக்கை.

இது குறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய கடிதத்தில்,

2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ/மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அதனைத் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024 -க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் போது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர்களிடமிருந்து (இடைநிலை) இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட்ட தேவைப்பட்டியலின் அடிப்படையில் நோட்டுப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், பெறப்பட்ட விவரத்தினை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) சார்ந்த அலுவலர்களால் உரிய பதிவுகள் மேற்கொண்ட பின்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் (Distribution Register) பதிவு செய்யப்பட வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியர்களிடம் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கையொப்பம் பெற்று மாவட்டக்கல்வி அலுவலக கோப்பில் பராமரிக்க வேண்டும்.

விநியோக மையங்களிலிலிருந்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மூலம் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள்,

நோட்டுப்புத்தகங்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மூலம் கோரப்பட்ட தேவைப்பட்டியலை விட கூடுதல்/குறைவாக பெறப்பட்டால் இவ்வியக்ககத்திற்கு உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பெறப்படவில்லை எனில் வேறொரு மாவட்டத்தில் கூடுதலாக பெறப்பட்டிருப்பின் அவற்றைப் பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொண்ட பிறகும் தேவை இருப்பின் இவ்வியக்க வி2/இ பிரிவு மின்னஞ்சல் (v2section2022@gmail.com and Dseesection@gmail.com) முகவரிக்கு உடனடியாக தெரிவித்து விட்டு, அது சார்ந்த விவரங்களை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) அலைபேசி வழியாக உடன் தெரிவிக்க வேண்டும்.

2024-25 ஆம் கல்வியாண்டில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மாணவ/ மாணவியருக்கு வழங்கப்படும் வரை பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பழைய கட்டிடங்கள் மற்றும் மின்கசிவு மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

பள்ளித் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு முதன்மைக் அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கல்வி பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பெறப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட விவரத்தை உடனுக்குடன் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

Also Read: வேளாண் துறையில் முதலமைச்சரின் சீர்மிகு திட்டங்கள்... இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!