Tamilnadu

”கள்ள மவுனம் பழனிசாமிக்கு கைவந்த கலை” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

கேரள, கர்நாடக அரசுகள் காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்கிறது நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல - பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வாசகத்திற்கு மறு உருவம் பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல! காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை - காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு என்பதுதான் உண்மை. அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு “வட்டவடா” எனக் கேரளாவில் அழைக்கப்படுகிறது.

இதைப் பொருத்தவரை - சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்” எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்.

இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து – தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல - அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அந்த கடவுளே எங்க மோடியின் பக்தர்தான்...” - எல்லை மீறிய பாஜக வேட்பாளருக்கு குவியும் கண்டனம் !