Tamilnadu

FACT CHECK: 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.. போலி செய்திக்கு தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்!

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று பரவி வந்தது. இதையடுத்து இந்த தகவல் முற்றிலும் போலி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கம் வருமாறு :

"சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது."

Also Read: இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!