Tamilnadu

“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த செய்தி தவறானது எனவும், இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், " காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

டில்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக “காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை“ என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: உ.பி-யில் பாஜக வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி : வீடியோ எடுத்தவர்களை மிரட்டிய பாஜகவினர் !