Tamilnadu

100% தேர்ச்சி - பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒர் மைல்கல் : தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா!

அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் என்பதை தொடர்ந்து பறைசாற்றும் விதமாக நடப்புக் கல்வியாண்டின் பொதுத் தேர்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

​மேல்நிலைத் தேர்வில் (HSC +2), 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனைப் படைத்துள்ளனர். மேலும், தமிழ்ப் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

​இடைநிலைப் பள்ளி பொதுத்தேர்வில் (SSLC) 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.90 ஆகும். 1364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ் பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். ஆக மொத்தம் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் (397+1364) 1761 பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும். பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் மேலும் ஒர் மைல்கல் ஆகும்.

​இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு மாணவர் மைய திட்டங்களும், சிறப்பான வழி காட்டல்களும் ஆகும்.​ எனவே இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம் சென்னையில் ஒரு சீர்மீகு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (8+35) 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

​இப்பாராட்டு விழாவின் போது ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற (Last 5 Places) 5 தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதுடன், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து கருத்துகள் பரிமாற்றம் ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மேலும் அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

​ஒவ்வோர் ஆண்டும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 100 சதவீத இலக்கை எட்டவும் வழிவகை செய்யும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Also Read: “ரூ.65 கோடியில் புதிய கட்டடம்... உலக தரத்திற்கு உயரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை” : சிறப்புச் செய்தி!