Tamilnadu

குஜராத், உ.பி-யில் இருந்தே போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு!

ராமநாதபுரம் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டு ஒரு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்," நீதிமன்றம் போதை தடுப்பு வழக்கு ஒன்றில் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த ஆய்வாளரே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் தமிழக போதை தடுப்பு பிரிவின் சார்பில் அறிக்கை சமர்ப்பித்தார் அதில், " பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி ஹெராயின் உள்ளிட்ட பிற போதை பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1கோடியே 43 லட்சத்து 52,957 ரூபாய் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

7,389 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் அல்லது துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒன்றிய அரசின் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தான் குறைவான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை பகுதியை பொறுத்தவரை 2019 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 49 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1070.670 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள்," தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அறுவுறுத்தியதோடு, வழக்கில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also Read: சவுக்கு சங்கர் மீது 8 வழக்கு.. மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் அடுத்தடுத்து புகார் - நடந்தது என்ன?