Tamilnadu

நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு : அடுத்தடுத்து சிக்கும் பாஜக நிர்வாகிகள் !

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னர் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.2 லட்சம் பணம், வேஷ்டி, ஃபுல் பாட்டில், டின் பீர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி பா.ஜ.க. மாநில தொழில்துறை பிரிவு துணைத்தலைவர் கோவர்தனன் உள்பட 4 பேருக்கு தாம்பர பெருநகர காவல்துறை சம்மன் அனுப்பினர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி போலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து பாஜக மாநில பொருளாளர் சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் சஇந்த ம்மன் அனுப்ப வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் கோவர்த்தன் வீடு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் முருகன், முருகனின் பணியாளர்கள் ஜெய்சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: “மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!