Tamilnadu

“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !

சவுக்கு மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருபவர் சங்கர். இந்த பக்கத்தில் இவர் அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனாலே இவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர் பலமுறை அவதூறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார். அந்த வகையில் அண்மையில் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதையடுத்து கோவை சைபர் க்ரைம் போலிஸார் சங்கர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

அதனடிப்படையில் இன்று அதிகாலை தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். மேலும் சங்கர் மீது 294(b), 509, 353 உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடியே பெண் காவலர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய சவுக்கு சங்கருக்கு தற்போது மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் இவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை வருமாறு :

"பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு, எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் பாராமல்,மழை என்றும் பாராமல், புயல் என்றும் பாராமல், வெள்ளம்மென்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் தங்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும், மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக சவுக்கு சங்கர் அவர்கள் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதி, அம்பேத்கர், பெரியார், போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்ந்த மகளிர் காவலாளிகள்.

அவர்கள் பெண் என்பதினால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது, எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ், தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம். பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்."

Also Read: பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !