Tamilnadu

உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி

சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் ஓ.எம்.ஆர் பகுதியில் பாஸ்ட் புட் உணவுக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மணிவண்ணன் காரில் தனது கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்ற கார் வழி விடாமல் சென்றுள்ளது. பிறகு பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே, மணிவண்ணன் ஹாரன் அடித்து வழி விடுமாறு சமிக்ஞை செய்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அந்த காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து மணிவண்ணனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரது சட்டையைக் கிழித்துத் தாக்கி இருக்கிறார்கள்.

அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் அவர்களை தடுத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் அங்குக் கூடியதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மணிவண்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தகராறு செய்து தப்பிச் சென்ற கோபி, சுடலையாண்டி, கார்த்திக் ராஜா ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.

இதில் கார்த்திக் ராஜா திருவெற்றியூர் கிழக்கு பா.ஜ.க பொருளாதார பிரிவு மாவட்டச் செயலாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!