Tamilnadu

போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !

சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, வாட்ஸ் அப் குழு மூலம் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மண்டல தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 8 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருவல்லிகேணியை சேர்ந்த சுல்தான் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்தது தெரியவந்தது. காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து ராகுலை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

அதில் ராகுல் என்பவர் நீச்சல் குளம் தொடர்பான பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர், திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். வடக்கு மண்டல கூடுதல் ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருளை ராகுல் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விலை உயர்ந்த போதைப்பொருள் என்பதால் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து சென்னையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு போதைமாத்திரை வினியோகம் செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டாரா? என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், வண்ணாரப்பேட்டையில் உள்ள காதர் மொய்தீன் என்பவர் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 8 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !