Tamilnadu

காவி நிறமாக மாறிய DD லோகோ : சென்னையில் தூர்தர்ஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.க. போராட்டம் !

இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் எனப்படும் DD தற்போது பல்வேறு மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொதிகை என்ற பெயரில் தமிழில் சேவைகளை வழங்கி வந்த தூர்தர்ஷனின் பெயர் பாஜக ஆட்சிக்கு வந்ததும் DD தமிழ் என மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்தி தொலைக்காட்சியான DD News லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது நாடு முழுவதும் இருந்து வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் தூர்தர்ஷன் அலுவலகம் முன்னர் திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவர்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் தலைமையிலான திராவிட கழகத்தினர் அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலையில் இருந்து தூர்தர்ஷன் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் பொழுது செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் கலி பூங்குன்றன், இந்தி திணிப்பு போராட்டம் என்பது திராவிடர்களின் ஒரு தனித்தன்மையாகும். கடந்த 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்ட தமிழ்நாடு வரலாற்றில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது. தந்தை பெரியார் என்கின்ற பட்டத்தை இந்த இந்திய போராட்டத்தின் மூலமாக தான் வழங்கினார்கள்.

பெயர் பலகையில் முதல் இடத்தில் இந்தியும், இரண்டாவது இடத்தில் தமிழும், மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் இருந்த காலக்கட்டம். ஆனால் இன்று ஊர்களில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க முதல் காரணம் திராவிடர்கள் நடத்திய இந்தி திணிப்பு போராட்டம் தான் காரணம்.

ஆனால் இந்த ஒன்றிய அரசு இந்திக்கு 1400 கோடியும் தமிழுக்கு வெறும் 240 கோடி மட்டுமே மொழி வளர்ச்சி நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. சமஸ்கிருதம் இறந்த மொழி, யாரும் பேசுகின்ற மொழி அல்லஅது . ஆனால் தமிழ் அப்படிப்பட்ட மொழி அல்ல. பொதிகை பெயரை மாற்றியும், தூர்தர்ஷன் இலட்சணையை காவிமயமாக்கி உள்ளார்கள். இவற்றை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் தான் முக்கியமான மொழிகள் என சட்டம் ஏற்றுள்ளார்கள். குறிப்பாக ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்கின்ற பெயரில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை சாதாரண மொழி பிரச்சனையாக பார்க்காமல் தமிழ்நாட்டின் பண்பாடு கலாச்சாரம் அழிக்கப்படுவதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு பொதிகை என்பதை மீண்டும் கொண்டு வர வேண்டும். தூர்தர்ஷனை காவிமயமாக்கியதை மாற்றி மீண்டும் பழைய நிலையை கொண்டு வர வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்" என்று கூறியுள்ளார்.

Also Read: தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !