Tamilnadu

அரசின் அறிவிப்பை மீறி எம்.டெக் படிப்பு அறிமுகம்? - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பெரியார் பல்கலைக்கழகம்!

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் கலை அறிவியல் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாகப் பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகார் எழுந்தது.

அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த டிசம்பர் 26ந் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மீறி எம்.டெக் படிப்புகள் தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்துள்ளது.

தொழில் நுட்ப படிப்புகளை பொறுத்தவரை அண்ணா பல்கலை கழகத்தில் மட்டுமே தொழில் நுட்ப படிப்புகள் துவங்க அனுமதி அளிக்க முடியும் என்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப படிப்புகள் துவங்க அனுமதி அளிக்க முடியாது என்றும் சட்டமன்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்து உள்ளார். மேலும் அவ்வாறு துவங்கினால் அது உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

ஆனால் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கினை கடைபிடித்து வரும் பெரியார் பல்கலைக் கழகம் இன்று வெளியிட்ட 2024-2025 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விளம்பரத்தில், மீண்டும் எம்.டெக் வகுப்பினை கொண்டுவந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எம்.டெக் வகுப்பு எடுக்க, ஆசிரியர்கள் எம்.டெக முடித்து இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர்கள் எம்.எஸ்.சி மட்டுமே முடித்து உள்ளதால் இவர்களால் எம்.டெக் வகுப்பு எடுக்க முடியாது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பெரியார் பல்கலைக் கழகம் உடனடியாக எம்.டெக் வகுப்பினை நிறுத்த வேண்டும் என கோரிககை எழுந்துள்ளது. தமிழக அரசோடு மோதல் போக்கினை கடை பிடிக்கும் பல்கலை மாணவர்களின் எதிற்காலத்தோடு மோதுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: மற்றொரு முறைகேட்டு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர்: நடவடிக்கை கோரி எழுந்த புகார்!