Tamilnadu

GSTயை சொல்லி பா.ஜ.கவால் வாக்கு கேட்க முடியுமா? : கமலஹாசன் கேள்வி!

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய கமலஹாசன்," பெட்ரோல் விலை உயர்வு காரணமாகத் தொழில் முழுவதும் பாதிப்படைந்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த GSTயால் கொங்கு மண்டலமே அழிந்துவிட்டது. GSTயை சொல்லி பா.ஜ.கவால் வாக்கு கேட்க முடியுமா?

இந்தியாவில் பெண்கள் ஜனத்தொகையில் 43% மகளிர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள். இப்போது கூறுங்கள் திராவிட மாடல் அரசு நமது தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளதா என்பதை. உலக நாடுகளில் இன்றைய நிலையில் இந்தியாவில் 35% குழந்தைகள் அரை பட்டினியாக இருக்கிறார்கள். 2027 இல் இதே குழந்தைகள் அரை வயிற்றுடன் வேலைக்குச் செல்ல தயாராகி விடுவார்கள்.

இந்த நாட்டில் 35% குழந்தைகள் அரை பட்டினி என்று கூறிக்கொண்டு வல்லரசு நாடுகள் சொல்லும் நிலையில் தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டியை வழங்கிய முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். குறிப்பாக மதிய உணவுடன் சேர்த்து பிள்ளைகள் பசியுடன் கல்வி பயிலக் கூடாது என்கின்ற நோக்கில் காலை உணவையும் சேர்த்து வழங்கி வருவது தான் திராவிட மாடல அரசு.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மகளிர்களுக்கான இலவச பேருந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என தமிழ்நாடு அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னொருமுறை திராவிட மாடலை கிண்டல் செய்யாதீர்கள் அது உங்களை நீங்களே கேலி செய்வதற்குச் சமம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தட்டிதூக்கும் இந்தியா கூட்டணி - 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெல்லும் : ABP- CVoter கருத்துக் கணிப்பு