Tamilnadu

அரசுப் பள்ளியில் புகுந்து பாலியல் தொல்லை... பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ்!

பாஜக, நீண்ட காலமாகவே ரௌடிகளையும், குற்றப்பின்னணி கொண்டவர்களையும் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. மேலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. அதோடு குற்றம்சாட்டப்பட்டவர்களும், குற்றவாளிகளும் பாஜகவில் இணைந்த பிறகு, அவர்கள் மேல் உள்ள வழக்குகள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது கூட பாஜக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி இருக்கும் சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர், அரசுப் பள்ளியில் நுழைந்து காலை உணவு திட்ட பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ள சாமிநாதபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி பணியில் இருந்த போது, புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் என்பவர் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்யச் சென்றுள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த மகுடீஸ்வரன், காலை உணவு திட்ட பொறுப்பாளரை திடீரென மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து துன்புறுத்தியுள்ளார். மகுடீஸ்வரனிடமிருந்து மீண்டு வந்த அந்த பெண், சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியையும் தீவிரமாகி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி மகுடீஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: வேட்புமனுவில் தில்லுமுல்லு செய்த ஒன்றிய அமைச்சர் : மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்ததால் சர்ச்சை !