Tamilnadu

”மோடி எத்தனை முறை தமிழ்நாட்டை சுற்றி வந்தாலும் பாஜக ஒரு சீட் கூட வெல்லாது” : அமைச்சர் உதயநிதி பேச்சு!

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி தலைமையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று இரவு கீழ்பெண்ணாத்தூர் பகுதியில்.என்.அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து இன்று காலை திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடலென மக்கள் கூட்டம் இருந்தது.

இக்கூட்டத்தில் "10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற ஒன்றிய பாஜக அரசை அப்புறப்படுத்தி, நாட்டில் நிலையான - நீடித்த வளர்ச்சியை உருவாக்க இந்த கூட்டணி அரசை அமைப்பதே நமது லட்சியம்" என அமைச்சர் உதயநிதி உரையாற்றினார்.

பின்னர் இன்று மாலை திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அண்ணாதுரைக்கு வாக்கு கேட்டு கலைஞர் பேரன் வந்திருக்கிறேன். அவரை கடந்த முறை வெற்றி பெற வைத்ததை விட இம்முறை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டைச் சுற்றி சுற்றி வருகிறார். அவர் எத்தனை சுற்றுச் சுற்றினாலும் பா.ஜ.கவால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வாங்க முடியாது. ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வரிப்பணம் கொடுத்தால், அவர்கள் நமக்குத் திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டும்தான். அதனால், இனிமேல் நான் நரேந்திர மோடி என பெயரைச் சொல்லி அழைக்க மாட்டேன். இனிமேல் அவர் பெயர், ‘மிஸ்டர் 29 பைசா' என்றுதான் அழைக்கப் போகிறேன். இனி நீங்களும் அப்படிக் கூப்பிட வேண்டும்.

விடியல் பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் இதுவரை 460 கோடி முறை பயணம் மேற்கொண்டு மகளிர் பயன்பெற்றுள்ளனர். இலவச பேருந்தின் உரிமையாளர்கள் மகளிர்தான். இந்த பேருந்திற்கு ஸ்டாலின் பேருந்து என மகளிர் செல்லமாக பெயர் வைத்துள்ளனர். நானாவது கல்லை நாட்டினேன். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியிடம் பல்லைக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. நான் என் கொள்கையை மாற்றி பேசவில்லை. ஆட்களுக்கு தகுந்தார் போல் மாற்றிப் பேசக்கூடியவர் பழனிச்சாமிதான் " என தெரிவித்துள்ளார்.

Also Read: 'Quota-வுல நான் படிக்கல' : தினமும் வாய் கூசாமல் பொய் பேசும் அண்ணாமலை!