Tamilnadu

குஷ்பூவுக்கு எதிராக கொந்தளிக்கும் பெண்கள்.. செருப்பால் அடித்தும், எரித்தும் மக்கள் எதிர்ப்பு !

திமுக ஆட்சியமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், இதற்கு நாடு முழுவதுமிருந்து வரவேற்பு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

அதிலும் கலைஞர் உரிமைத் தொகை மூலம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டமானது நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்துக்கொண்டனர். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணத்தை பெண்கள் தங்கள், தங்கள் குழந்தைகள், வீட்டுக்கு தேவையான சிறுசிறு பொருட்களை கூட வாங்கிக்கொள்ள முடியும். பலரும் பாராட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ 'பிச்சை' என்று கூறி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குஷ்பூவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், எரித்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்புகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்பூவின் பேச்சுக்கு இணையத்தில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?