Tamilnadu

சென்னையில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தி : விளக்கம் அளித்த உண்மை சரிபார்ப்பு குழு !

சமீப காலமாக தமிழ்நாட்டில் ஏராளமான வதந்திகள் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் உண்மை சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டது. அதிலிருந்து பரவி வரும் பல்வேறு வதந்திகள் குறித்த விவரங்களை அந்த குழு வெளியிட்டு வருகிறது.

மேலும், அது குறித்த உண்மை தன்மைகளையும் அந்த குழு வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், சில நாட்களாக சென்னை பள்ளி ஒன்றில் குழந்தைகள் கடந்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூகவலைத்தளத்திலும் அது குறித்த தகவல் பரபரப்பட்டது.

இந்த நிலையில், அந்த குழந்தை கடத்தல் குறித்த செய்தி தவறானது என்பதும், அந்த தகவல் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில்,

'சிட்லபாக்கம் ஆலிவ் பள்ளியில் குழந்தைகள் கடத்தல்' என்பது வதந்தி!

வதந்தி:

"சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள ஆலிவ் பள்ளியில், 7 முதல் 10 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஊடகங்களில் இதுதொடர்பான செய்தி சில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. பின்னர், இச்செய்தி நிறுத்தப்பட்டது. இந்தத் தகவலை பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி எச்சரிக்கை செய்யவும்” என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

குழந்தைகள் கடத்தல் தொடர்பான இச்செய்தி முற்றிலும் பொய்யானது.

இதுகுறித்து 'உண்மை சரிபார்ப்புக் குழு', ஆலிவ் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவ்வாறு எவ்வித நிகழ்வும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளனர்.

சிட்லபாக்கம் காவல் நிலைய அதிகாரிகளிடம் பேசிய போது, இதுதொடர்பாக எவ்வித வழக்கும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.எனவே, இதுபோன்ற பதிவுகளைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம்.வதந்திகளைப் பரப்புவது குற்றச் செயலாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.