Tamilnadu

தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சித்த பா.ஜ.க. மாவட்ட தலைவர்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் செலவிற்காக தருமபுரம் ஆதீனத்திடம் பல கோடி தொகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் அகோரம்.

மயிலாடுதுறையில் ரவுடி கும்பலை இயக்கி வரும் அகோரம், தருமபுரம் ஆதீனத்தையும் அவரின் மடத்தில் உள்ளோரையும் கொல்லவும் தயங்க மாட்டோம் என ஆதீனத்தின் தலைமை பீடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி என்பவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்

இது குறித்து, விருத்தகிரி என்பவர் கொடுத்த முதல் தகவல் அறிக்கையில் (FIR),

“கடந்த சில நாட்களாக ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவரும், எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக என்னை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மடாதிபதி சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தங்களிடம் உள்ளதாகவும், தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானபடுத்தி விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால், விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெறுக்கி கொலை செய்ய முயற்சித்தனர். நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்தேன்.

பின்னர் இது தொடர்பாக கொடியரசு (கலைமகள் பள்ளி நிறுவனர்), செய்யூர் வழக்கறிஞர் ஜெயசந்திரன், திருக்கடையூர் விஜயகுமார் மற்றும் பா.ஜ.க.வின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்தாக கூறினார்கள்.

மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்சினை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும், வீணாக ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் மிரட்டினர். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம்” என குறிப்பிட்டுருந்தார்.

வடமாநிலங்களில் தேர்தலுக்காக கலவரங்கள், கொலைகள் உள்ளிட்ட பலவற்றை தொடர்ந்து செய்து, அதுவே தங்களின் வெற்றி சூத்திரம் என கருதிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. தற்போது அதை தமிழ்நாட்டிலும் செய்ய துணிந்திருக்கிறது.

அதனை துணிச்சலாக தமிழ்நாட்டு காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். மேல் குறிப்பிட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரம் ஆதீன மடம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றிவரும் சைவ மடம். ஆன்மீக சேவை மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது.

எனினும், தாங்கள் தான் இந்துக்களை காப்பாற்ற போகிறோம் என்று மேடைக்கு மேடை முழங்கும் பா.ஜ.க. கட்சியினரின் இந்த செயல் அவர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது.

Also Read: மு.க. ஸ்டாலின் எனும் பெயருக்கே அஞ்சும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.!