Tamilnadu

“விவசாயிகளிடம் தீவிரவாதிகள் போல் நடந்துக்கொள்கிறது மோடி அரசு” : கே.பாலகிருஷ்ணன் ஆவேச பேட்டி!

திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிபிஐ(எம்) கட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், “ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு மோசமான அரசாக திகழ்ந்து வருவதை டெல்லியில் நடைபெறும் நிகழ்வை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களையும் செய்துவிட்டதாகவும், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துவிட்டதாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் பிரதமர் அலுவலகத்தை சுற்றி விவசாயிகள் ஒன்று திரண்டு 4 ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு, 4 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு தயாராக இல்லை.

அதேவேளையில் போராடும் விவசாயிகளை தடுப்பது, சாலையை துண்டித்து முள் வேலி அமைப்பது போன்ற தீவிர செயலில் ஈடுபடுகிறார். ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக மாறி சர்வாதிகாரம் நடந்து வருகின்ற நிலையே காணப்படுகிறது. இந்த போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் இறந்துள்ளனர். 1000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கண் பார்வை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 37 ஆயிர் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ஒன்றிய பாஜக அரசு கோரிக்கை வைத்தும் 1 ரூபாய் கூட நிதி வழங்காமல் அடம் பிடிக்கும் பிரதமர் மோடி எதற்காக தமிழகத்திற்கு வரவேண்டும்.

Also Read: தேர்தல் பத்திர வழக்கு: உச்சநீதிமன்றத்தில் CPM தொடுத்த வழக்கில் கிடைத்த மகத்தான தீர்ப்பு- கே.பாலகிருஷ்ணன்!