Tamilnadu

மாணவிகள் அளித்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத கலாஷேத்ரா நிர்வாகம் - உயர்நீதின்றம் கண்டனம் !

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் புகாரை தொடர்ந்து அக்கல்லூரி நிர்வாகம் விசாரித்தது. ஆனால் இந்த குற்றசாட்டு உண்மையல்ல என்று கல்லூரி நிர்வாக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

இத்தண்டிடையே கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், “10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்” என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கினார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கலாஷே்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு படிக்கும் மாணவிகள் பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பின்னர் சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில்,  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ரா-வுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பதகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டுமென்றும் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு முடிவுரை எழுதிவருகின்றது பாஜக - காங். மேலிட பொறுப்பாளர் விமர்சனம் !