Tamilnadu

“சமூக நீதியை உச்சரிக்க கூட மனமில்லாதவர்களுக்கு தமிழ்நாடு தரும் பதில்...” - ஸ்ரீபதிக்கு முதல்வர் வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்ற பெண், தனது 23-வது வயதில் சிவில் நீதிபதியாக சாதனை படைத்துள்ளார். சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணமான நிலையில், தனது படிப்பை முடித்த கையோடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்துள்ளார்.

தேர்வு நடைபெறும் அன்று பிரசவ தேதி இருந்ததால், அதற்கு 2 நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்று கொண்ட இவர், குழந்தை பிறந்து 2 நாட்களில் மலைக்கிராமத்தில் இருந்து சென்னை வரை காரில் பயணம் செய்து தேர்வு எழுதினார். அவரது விடாமுயற்சியின் பலனாக தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாக சாதனை படைத்துள்ளார்.

தமிழ் வழி கல்வி கற்று இளம் வயதில் சிவில் நீதிபதியான ஸ்ரீபதிக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல

நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!

பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்

பெண்களைக் கற்கவைப் பீரே!

இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்

னேறவேண் டும்வைய மேலே!”

Also Read: பிரசவ நாளில் தேர்வு... நீதிபதியாக சாதனை படத்தை பழங்குடியின இளம்பெண்... ஸ்ரீபதிக்கு குவியும் பாராட்டுகள் !