Tamilnadu

இந்தியா அளவில் ட்ரெண்டாகி வரும் #GetOutRavi : ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை மரபுபடி தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசித்துக் கூட்டத் தொடரை தொடங்குவதுதான் வழக்கம். அதன்படி இன்று கூட்டத் தொடர் தொடங்கியது.

ஆனால் ஆளுநர் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்க மறுத்துவிட்டார். மேலும் தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் பல இடங்களில் நான் உடன்படவில்லை போன்ற உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறி வேண்டும் என்றே தனது உரையை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு முழு உரையையும் வாசித்தார். அப்போது அளுநர் அவையிலேயே மிக இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார். பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கூறிய ஆளுநர்தான் அவை மரபை மீறி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார்.

மேலும் கடந்த ஆண்டும் ஆளுநர் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் முழுமையாகப் புறக்கணித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா அளவில் #GetOutRavi என்ற ஹேஷ்டாக் x சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: ”ஆளுநரின் செயல் திட்டமிட்ட சதியாகும்” : வைகோ கடும் கண்டனம்!